ராஜாவின் இலாகாவை வேறு திமுக அமைச்சர்களுக்குத் தரக் கூடாது-இளங்கோவன்
சென்னை: ராஜா ராஜினாமா செய்த தொலைத் தொடர்புத்துறையை வேறு திமுக அமைச்சர்களுக்குத் தரக் கூடாது. அப்படித் தந்தால் ராஜா போய் ராணி வந்த கதையாகி விடும் என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜா விலகியுள்ளது குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ராஜா பதவி விலகிய பிறகு அவர் வகித்த பதவியை மீண்டும் திமுக அமைச்சருக்கே கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது ராஜா போய் ராணி வந்தது மாதிரி ஆகி விடும் என்றார் இளங்கோவன்.
ராஜா வகித்து வந்த தொலைத் தொடர்புத்துறைக்கு கனிமொழி அமைச்சராக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்தே இளங்கோவன் இவ்வாறு பேசியுள்ளதாக கருதப்படுகிறது.
திமுகவுடனான கூட்டணி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு இளங்கோவன் பதிலளிக்கையில், இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கிறது. ஆனால் அடுத்த நிமிடம்; நாளை என்னவாகுமோ என்று தெரியவில்லை என்றார்.