தூத்துக்குடியில் மோசடி வழக்கில் பிரபல அர்ச்சகர் கைது
தூத்துக்குடி: ஷிப்பிங் நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்ததாக கோயில் அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் குமார்பாண்டியன் (28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மணிநகரைச் சேர்ந்த கோயில் அர்ச்சகரான முத்துபட்டர் என்பவரிடம் இருந்து ரூ. 80 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்.
இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1.50 லட்சம் வரை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் முத்துபட்டர் இவரிடம் இருந்து கடனுக்கு ஈடாக பெற்ற 22 பவுன் தங்க நகைகள் மற்றும் நிலபத்திரம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு திரும்பத் தர மறுத்துள்ளார்.
இதனால் குமார் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். இதனை ஏற்க போலீசார் மறுத்ததால் அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தூத்துக்குடி இரண்டாவது ஜே.எம். நீதிமன்றம் குமாரின் மனுவை ஏற்று விசாரிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் முத்துபட்டர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.