காஞ்சிபுரத்தில் பிரபல டாக்டர் மனோகரன் சுட்டுத் தற்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் பிரபல மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் மனோகரன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
70 வயதான டாக்டர் மனோகரன், காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே மனோகரன் கிளினிக் என்ற மருத்துவமனையை நடத்தி வந்தார். வீடு மருத்துவமனை சாலையில் இருக்கிறது. இவருக்கு மனைவி டெட்னிசா, மகன்கள் பார்த்திபன், பிரேமானந்த், ஜெய்தீப் மற்றும் ஜெனீபர் என்ற மகள் உள்ளனர்.
மகன்கள் மூவருமே டாக்டர்கள் ஆவர். ஜெய்தீப் மட்டும் காஞ்சிபுரத்தில் தனி மருத்துவமனை நடத்தி வந்தார். மற்ற இருவரில் பார்த்திபன் சென்னையிலும், இனனொருவர் கனடாவிலும் உள்ளனர். மகள் சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்.
மனோகரனும், மனைவியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதையடுத்து மனைவி ஓடி வந்து பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில்
மனோகரன் மரணமடைந்து கிடந்ததைப் பார்த்து அலறினார்.
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மனோகரன். இதனால் அவரது முகம் கோரமாக சிதைந்து போயிருந்தது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.
சமீப காலமாகவே தற்கொலை மனோபாவத்தில் இருந்து வந்துள்ளார் மனோகரன். இதுகுறித்து தனது நெருக்கமான நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். பிள்ளைகள் தனித் தனியாக போய் விட்டதால், மனைவியுடன் தனிமையில் வாடி வந்ததால் தற்கொலை முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.