சீமானை பாதுகாப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கு-இறுதி விசாரணை தேதி அறிவிப்பு
சென்னை: திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த வழக்கில் இறுதி விசாரணைக்கான தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி சென்னையில் இலங்கை கடற்பைடயினர் தமிழ மீனவர்களைத் தாக்கி,சுட்டுக் கொன்று வருவதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார். அப்போது தமிழர்களைக் கொல்லும் சிங்களர்களை எச்சரித்துப் பேசினார்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் போட்டது போலீஸ். மேலும் ஜூலை 12ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சீமானின் சகோதரரான ஜேம்ஸ் பீட்டர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்ந்து இழுபறியாக உள்ளது.
இந்த நிலையில், நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், சி.எஸ்.கர்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வக்கீல் என்.சந்திரசேகரன், மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வருகிற 25ம் தேதி இந்த மனு இறுதியாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications