69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய ட்ராய் பரிந்துரை... மவுனம் சாதிக்கும் கபில் சிபல்!
டெல்லி: ஏர்செல், யூனிநார், விடியோகான், எடிஸ்சாலட் (ஸ்வான்) உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருக்கிறது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 2008-09-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு உரிமங்களை டிராய் ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில் 5 முக்கிய நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. அதில் யூனிநார் நிறுவனத்தின் 8 உரிமங்களும் ஏர்செல் நிறுவனத்தின் 5 உரிமங்களும் அடக்கம் எனத் தெரிய வந்திருக்கிறது.
ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைப்படி சேவைகளைத் துவக்காததும், உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவற்றில் சில நிறுவனங்கள் அதிகபட்ச உரிமம் பெற பொய்யான முகவரி்கள், தகவல்களை அளித்துள்ளன. இவற்றை குறைந்தபட்சம் ஆராயாமலேயே இந்த உரிமங்களை வழங்கியுள்ளார் ராஜா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த உரிமங்களை உடனடியாக ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.
ஆனால் ட்ராயின் இந்தப் பரிந்துரைக்கு இன்னும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை துறையின் புதிய அமைச்சர் கபில் சிபல். நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதுவும் பெரும் பிரச்சினைகளைக் கிளப்பும் என்று தெரிகிறது.