ஸ்பெக்ட்ரம்-எதியூரப்பா ஊழல்: நாடாளுமன்றத்தில் 6வது நாளாக அமளி-திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் கிளப்பி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகளை நடத்த முடியவில்லை.
இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாடாளுமன்றக் கூட்டம் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புதிய நிபந்தனையை விதித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை மத்திய அரசு ஏற்க மறுப்பதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
இன்றும் இரு அவைகளிலும் 6வது நாளாக அமளி தொடர்ந்தது. மக்களவை இன்று காலை கூடியதும் பாஜக சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பதிலடியாக நில ஊழலில் ஈடுபட்ட கர்நாடக பாஜக முதல்வரை நீ்க்க வேண்டும் என்று கோரினர். எதியூரப்பாவின் போஸ்டர்களை உயர்த்தியபடி கோஷமிட்டனர்.
அவர்களுடன் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் நிறுவனருமான தேவே கெளடாவும் சேர்ந்து கொண்டார். அவரும் எதியூரப்பாவின் போஸ்டரை பிடித்தப்படி நின்று கோஷமிட்டார்.
இதனால் பெரும் அமளி நிலவியது. சபாநாயகர் மீராகுமார் காங்கிரஸ் எம்.பிக்களையும், பாஜக எம்.பிக்களையும் அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால் எம்.பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டப்படி இருந்தனர். இதனால் அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக மீராகுமார் அறிவித்தார்.
12 மணிக்கு சபை கூடியதும், மீண்டும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அமளி ஏற்பட்டது. பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் பரஸ்பரம் ஸ்பெக்ட்ரம் ஊழல், எதியூரப்பா அரசின் நில மோசடி குறித்து குரல் எழுப்பியதால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவையை திங்கள்கிழமை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதே போல ராஜ்யசபாவிலும் பாஜக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களிடையே போட்டி கோஷத்தால் பெரும் அமளி நிலவியது.
பாஜக, அதிமுக எம்.பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கூட்டக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷமிட்டதால் அவையை துணை ஜனாதிபதியும் சபாநாயகருமான ஹமீத் அன்சாரி பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
ஆனால், அவை மீண்டும் கூடியதும் பாஜக, அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications