ஸ்ரீவைகுண்டம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி: கால் முறிந்தது
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் உள்ள கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் துரைபாண்டி. இவர் கடந்த 11-ம் தேதி பத்மநாபமங்கலத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கையில் ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் காரில் சென்று கொண்டிருந்தார்.
அவரது காரை துரைபாண்டி மறித்தும் காரை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த துரைபாண்டி அவரிடம் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து செல்வகுமார் போலீசில் புகார் கொடுத்தார்.
ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த 15-ம் தேதி துரைபாண்டியை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையி்ல் அடைத்தனர். இந்நிலையில் துரைபாண்டிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று சிறையில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இருகால்களும் முறிந்தன.
அவர் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.