காங்கிரஸாரை தொடர்ந்து திமுகவினர் புறக்கணிக்கின்றனர்-இளங்கோவன்
சேலம்: காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் திமுக அரசு ஒரு நாள் கூட நீடிக்க முடியாது. ஆனாலும், காங்கிரஸாரை தொடர்ந்து திமுகவினர் புறக்கணித்து வருகின்றனர் என்று புலம்பியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றால் தமிழகத்தில் திமுக அரசு நீடிக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்களை ஒரு கோவிலுக்குக் கூட டிரஸ்டியாக போட அவர்களுக்கு மனம் வரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அது நடப்பது கிடையாது. திமுக அரசால் தமிழக காங்கிரசார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
சில சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வேலை செய்து தருகிறேன் என்று சொன்னாலும், கவனிக்க வேண்டியவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் வேலை நடக்கிறது.
மத்திய அமைச்சரவையில் பதவிகளை கேட்டு பெறும் திமுகவுக்கு, தமிழகத்தில் கூட்டணில் உள்ள காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றாதது ஏன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications