கட்சி நிர்வாகிக்கு தொடர் கொலை மிரட்டல்-நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
சென்னை: புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதிக்கு, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சின்னத்துரை அனுப்பியிருந்த புகார் மனுவை டிஜிபிக்கு அனுப்பியுள்ளார் ராமகிருஷ்ணன்.
அப்புகார் கடிதத்தில், எங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எம். சின்னதுரை, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவின் நகலை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலங்களில் சமூக விரோதிகள் மற்றும் ரௌடிகளின் செயல்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் உச்சகட்டமாக சமீபத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே.
இப்பின்னணியில், எங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன் மக்கள் பிரச்சனைகள் மீதும் சமூக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருபவர்.
இதனைப் பொறுக்க இயலாத சில சமூக விரோதிகள் நேரிலும், தொலைபேசி மூலமும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, தாங்கள் இதன்மீது உரிய விசாரணை நடத்தி இச்சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்திடக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் கவிவர்மன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.