For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயம் சாராத கடன்களுக்கும் வட்டி சலுகை! - முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வேளாண்மை சாராத கடன்களுக்கும் வட்டிச் சலுகை தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழக விவசாயிகள் அனுபவித்து வந்த கடன் சுமைகளை முழுவதும் அகற்றும் நோக்கில், 31-3-2006 வரை இருந்த கூட்டுறவு விவசாயக் கடன்கள் ஏறத்தாழ 7 ஆயிரம் கோடி ரூபாயை 13-5-2006 அன்று இந்த அரசு பொறுப்பேற்ற விழா மேடையிலேயே தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தது.

அதன் பயனாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏறத்தாழ 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரும் பயன் அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, விவசாயம் அல்லாத அதாவது, விசைத்தறி, செங்கல் சூளை போன்ற பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பண்ணை சாராக் கடன் பெற்றவர்களுக்கு ஏற்பட்டிருந்த கடன் சுமையைக் குறைத்திடவும் இந்த அரசு முடிவு செய்தது.

அதன் பயனாக, 31.3.2007 அன்றைய நிலையில் தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் அனைத்திற்கும் அவர்கள் ஏற்கனவே செலுத்தி வந்த 12 சதவீத வட்டியை 6 சதவீதமாகக் குறைத்தும், அபராத வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்தும் இந்த அரசு ஆணையிட்டது. இந்த வட்டிச் சலுகையைப் பெற்றிட பண்ணை சாராக் கடன் பெற்றவர்கள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த 31.3.2010 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தமிழக அரசு வழங்கிய இச்சலுகை காரணமாக, 31.3.2010 வரை 79 ஆயிரத்து 932 பேர் 201 கோடியே 94 லட்சம் ரூபாய் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தினர்.

எனினும், இச்சலுகையின் முழு பலனையும் பெற முடியாத நிலையில் மீதமுள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 722 பேர், இச்சலுகைத் திட்டத்தை மேலும் நீட்டிக்குமாறு அரசுக்குக் கோரிக்கை அளித்துள்ளதைத் தொடர்ந்து, பண்ணை சாராக் கடன்களுக்கான சிறப்புக் கடன் தீர்வுத் திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்து 25 சதவீதத் தொகையைச் செலுத்தியவர்கள், மீதம் செலுத்த வேண்டிய தொகையை ஒரே தவணையில் அல்லது அதிகபட்சமாக 4 காலாண்டு தவணைகளில் 31-12-2011-க்குள் செலுத்தலாம்.

இத்திட்டத்தில் இதுவரை சேராதவர்கள் - அவர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 25 சதவீதத் தொகையை 28-2-2011-க்குள் செலுத்தி; மீதத்தொகையை ஒரே தவணையில் அல்லது அதிக பட்சமாக 4 காலாண்டு தவணைகளில் 31-12-2011-க்குள் செலுத்தலாம் என்று முதல்வர் கலைஞர் இன்று ஆணையிட்டுள்ளார்.

-இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X