டிச 5-ம் தேதி தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஸ்ட்ரைக்!
இது குறித்து தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு சங்க தலைவர் ஆர்.சுகுமார், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தமிழ்நாடு லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் நல்லதம்பி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிப்பதில் சட்ட விதிகள் மீறப்படுகிறது. முறைகேடுகள் நடக்கின்றன.
சுங்க வரி வசூலிப்பதில் தனியார் துறையின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சுங்க வரி வசூலிப்பதில் 1997-ல் இருந்த விதிமுறைகள் இருக்கவேண்டும். 2008-ல் அமல்படுத்திய விதிமுறைகள் இருக்கக் கூடாது. சுங்கவரி மிக மிக அதிகமாக உள்ளது.
சுங்க வரி வசூலிக்கும் இடங்களில் லாரி டிரைவர்களுக்கு கழிவறைகள் இருக்கவேண்டும். ஓய்வு எடுக்க இடம் இருக்கவேண்டும். முதலுதவி சிகிச்சைக்கு தயாராக இருக்கவேண்டும். ஆனால் அந்த வசதிகள் எதுவும் இல்லை.
எனவே இப்படிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அளவில் டிசம்பர் 5-ந் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் லாரிகள் உள்ளன. இவை அனைத்தும் ஓடாது.
25-ந் தேதிக்குள் மத்திய அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி. இதில் மாற்றுக்கருத்து இல்லை..." என்றனர்.