கடல்வாழ் உயிரினங்கள் கடத்தல் : ஒன்றரை ஆண்டுகளில் 150 பேர் கைது
தூத்துக்குடி: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை கடத்தியதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி சுந்தரராஜ் தெரிவித்தார்.
இது குறித்து தூத்துக்குடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
வன உயிரின சட்டம் 1972ன் கீழ் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்களைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை பிடிப்பது தொடர்கிறது. இது குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக வனத்துறை, காவல்துறை, கடலோரக் காவல்படை, மரைன் போலீஸ், சுங்க இலாகா மற்றும் மீன்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் அரிய கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியும். மன்னார் வளைகுடா பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்படும் கடல் அட்டைகள், கடல் குதிரைகள் பெருமளவு தாய்லாந்து, பர்மா, வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
மேலும் சுறா மீன்களின் துடுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அரிய கடல் வாழ் உயிரினங்களை கடத்தியது தொடர்பாக தமிழகத்தில் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 லாரிகள், 1 வேன், 3 விசைப்படகுகள், சில சிறிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வளைகுடாவில் பவளப் பாறைகள் வெட்டி கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.