ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சோனியா காந்தி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.
ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.
சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்..." என்றார்.












Click it and Unblock the Notifications