அடுத்த வாரம் இலங்கை போகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா-புதிய தூதரக திறப்பு குறித்து பேச்சு
இலங்கையில் போர் முடிவடைந்து விட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்து வருடம் ஒன்றைத் தாண்டி விட்டது. இருப்பினும் இதுவரை தமிழர்களுக்கான அரசியல் மறுமலர்ச்சி, உரிமைகளை அது தரவில்லை. மேலும் முள் வேலி முகாம்களில் இன்னும் தமிழர்கள் அடைந்து கிடக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை விமோச்சனம் இல்லை. மேலும் மறு வாழ்வு நடவடிக்கைகளும் மெத்தனமாகவும், அசமஞ்சமாகவும் நடந்து வருவதாக அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணா அடுத்த வாரம் இலங்கை செல்கிறார். அப்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து இலங்கையுடன் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளைக் கட்டித் தருவதாக இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது. இதுகுறித்தும் கிருஷ்ணா பேசுவார் எனத் தெரிகிறது.
சர்தாரியும் போகிறார்
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் இந்த வார இறுதியில், இலங்கை செல்கிறார். அப்போது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.
2வது முறையாக ராஜபக்சே அதிபராக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வரும் முதல் வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி.
சர்தாரியுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அகமது முக்தார், வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷியும் வருகின்றனராம்.
தமிழர்களுக்கு எதிரான ஈழப் போரின்போது சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகளை பெருமளவில் அளித்தது நினைவிருக்கலாம்.
மேலும், சீனாவுக்கு அடுத்து இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சியும், பல்வேறு உதவிகளையும் செய்யும் 2வது பெரிய நாடு பாகிஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.