போலீஸ் காவலில் தலித் இளைஞர் மர்ம மரணம்-கொலை என்று கூறி மக்கள் போராட்டம்
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞர் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி பொது மக்கள் 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அழகர் சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் சந்திரசேகர் (34). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
சந்திரசேகரை திருட்டு வழக்கு தொடர்பாக பெரியகுளம் வடகரை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் என்பவர் விசாரணைக்கு கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
தேவதானப்பட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சி களத்தில் வைத்து இரவு நேரத்தில் அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது போலீசார் சந்திரசேகரை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி அவரது தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், இறந்து போன சந்திரசேகரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முயன்றுள்ளனர். ஆனால் இதற்கு மருத்துவமனை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் இருந்த எஸ்.பி. பாலகிருஷ்ணனுக்கு இரவு 2 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே அவர் பெரியகுளம் கிளம்பி வந்தார். மேலும், திண்டுக்கல் எஸ்.பி. தினகரன் அதிவிரைவு படையுடன் பெரியகுளம் வந்தார். பெரியகுளம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சந்திரசேகரை லாக் அப்பில் வைத்து போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு தகவல் பரவியது.
இதனையடுத்து பெரியகுளம் காவல் நிலையத்தை சந்திரசேகரின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், பெரியகுளம் வழியாகச் சென்ற பேருந்துகளை மறித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.