இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு-டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நெல்லை: மதுரை இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கடந்த 1994-ம் ஆண்டு இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை திலகர்திடல் போலீசார் தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜாகீர் உசேன், அப்துல் அஜீஸ், ராஜா உசேன், சுபைதார், சீனி நயினாமுகமது, சாகுல் அமீது ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கி்ல் தொடர்புடைய அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சீனிநயினா முகமது மட்டும் ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார். இந்த தடா வழக்கு நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தடா சட்டத்தின் கீழ் தங்களை கைது செய்தது தவறு, தடா சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு அச்சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருவதை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 6 மாதத்திற்கு முன் தடா கைதி சாகுல் அமீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 10-ம் தேதி நீதிபதி சுகுணா முன்னியில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தடா வழக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய கைதி சுபைதார் தவிர மற்ற தடா கைதிகள் அனைவரும் நீதிபதி விஜயராகவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications