பிப்ரவரி மாதம் தமிழக மேலவைத் தேர்தல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மேல்சபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
78 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் பட்டதாரி தொகுதிகளில் இருந்து 7 உறுப்பினர்களும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 7 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்காக பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 29ம் தேதி வெளியிடப்படுகிறது.
மேலும் வரும் பிப்ரவரி மாதத்தில் மேல்சபை தேர்தலை நடத்தவும் தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
பட்டதாரி, ஆசிரியர்கள் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 14 பேர் தவிர உள்ளாட்சி மன்ற தொகுதிகளில் இருந்து 26 உறுப்பினர்களும், சட்டசபை தொகுதியில் இருந்து 26 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 உறுப்பினர்களை நியமன முறையில் மேல்சபை உறுப்பினர்களாக கவர்னர் நியமிப்பார்.
சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவோரை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்யவர். 26 உறுப்பினர்கள் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் 9 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால் மேல்சபைக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்.
உள்ளாட்சி தொகுதிகளை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத்தலைவர்கள் வாக்களித்து மேலவை உறுப்பினரைத் தேர்வு செய்வர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் மேலவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.