கூட்டுறவு மில்லில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மாயம்-அமைச்சர் விசாரணை
நெல்லை: நெல்லை, பேட்டை கூட்டுறவு மில்லில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு போனது குறித்து கைத்தறி துறை அமைச்சர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
நெல்லை பேட்டையில் கடந்த 1958-ம் ஆண்டு தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை துவங்கப்பட்டது. இந்த நூற்பாலையில் சுமார் 1800 பேர் வேலை செய்தனர். கடந்த 40 ஆண்டுகாலம் லாபத்தில் இயங்கி வந்த நூற்பாலை பல்வேறு காரணங்களால் கடந்த 2004-ம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது.
நவீன இயந்திரங்களின் வரவால் தனியார் நூற்பாலைகளுடன் போட்டி போட முடியாத நிலை, நிர்வாக சீர்கேடு மற்றும் கையாடல் போன்றவற்றால் ஆலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தொழிலாளர்கள் குடும்பங்கள் வருமானமின்றி கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆலைகளை மீண்டும் திறக்கக் கோரி தொழிலாளர்கள் போராட்ட்ம் நடத்தினர். இந்நிலையில் மூடப்பட்டுள்ள நூற்பாலையில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் மாயமானது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து நூற்பாலையில் தணிக்கை துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆலையில் உள்ள ராட்சத ஜெனரேட்டர், இயந்திரங்களின் காயி்ல், ஆயில் பேரல்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு போயிருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க தணிக்கை துறை அதிகாரிகள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இங்குள்ள முக்கிய இயந்திரங்கள் ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலைக்கு அரசு அனுமதியுடன் எடுத்துச் செல்லப்பட்டது. இதை பயன்படுத்தி சிலர் ஆலையில் உள்ள இயந்திரம் மற்றும் தளவாடப் பொருட்களை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே இது குறித்து விசாரணை நடத்த கைத்தறி துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் நேற்று நெல்லை வந்தார். பேட்டை நூற்பாலைக்கு சென்று ஆய்வு நடத்தி இயந்திரங்கள் திருட்டு போனது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications