ஊழல் புரிந்த எதியூரப்பா மீது பாஜக எடுத்த நடவடிக்கை என்ன? சோனியா கடும் தாக்கு
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து இன்று செய்தியாளர்கள் சோனியாவிடம் கருத்து கேட்டபோது, முதல்வர் நிதீஷ்குமார் பெற்ற வெற்றிக்காக அவரைப் பாராட்டுகிறேன் என்றார் சோனியா.
பின்னர் அவராகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ளும் முறை குறித்தும், எதியூரப்பா விவகாரம் குறித்தும் காட்டமாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழல் புகார்கள் குறித்து காங்கிரஸ் கட்சி உறுதியான, திடமான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்த யார் மீதாவது புகார் எழுந்தால் உடனடியாகநடவடிக்கை எடுத்துள்ளோம்.
முன்பு சசிதரூர் மீது புகார் வந்தபோது அவரை விலகச் சொன்னோம். அதேபோல மகாராஷ்டிர முதல்வர் மீது புகார் வந்தபோது அவரும் விலகினார். ஆனால் கர்நாடக முதல்வர் மீது ஊழல் புகார் வந்து இத்தனை நாட்களாகி விட்டபோதிலும், இதுவரை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் அறிய விரும்புகிறேன்.
நாங்கள் எடுத்த நடவடிக்கையையும், அந்தக் கட்சி (பாஜக) எடுத்த நடவடிக்கையையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். எங்களது நடவடிக்கைக்கே பாராட்டு கிடைக்கும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. பிரதமருக்கு இந்த விவகாரத்தில் 100 சதவீதம் தொடர்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும், பிரதமர் போன்ற அப்பழுக்கற்ற ஒரு தலைவரை எதிர்க்கட்சியினர் நடத்தும் விதம் மிகவும் வருத்தத்திற்குரியது.
கடந்த 2004ம் ஆண்டு முதலே பிரதமரை அவமானப்படுத்த வேண்டும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தீவிரமாக உள்ளனர். 2004 தேர்தலில் பிரசாரத்தின்போது பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதையே பிரதான கோஷமாக முன்வைத்தனர். அவரை திறமையற்றவர் என்றனர். ஆனால் நடந்தது என்ன?. அவர்கள் தோல்வி அடைந்தனர், பிரதமர் வெற்றி பெற்றார் என்றார் சோனியா காந்தி.