ஆந்திராவின் புதிய முதல்வரானார் கிரண்குமார் ரெட்டி

ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்து வந்த நெருக்குதலே இதற்கு முக்கியக் காரணம். ஜெகன் மோகன் ரெட்டியின் மிரட்டலுக்கும், நெருக்குதலுக்கும் காங்கிரஸ் மேலிடம் பணியாமல்தான் இருந்து வந்தது. இத்தனைக்கும் சோனியா காந்தியையும், பிரதமரையும் அவரது சாக்ஷி டிவி கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்ட காங்கிரஸ் மேலிடம் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாரானது. இந்த நிலையில்தான் பீகார் மாநில தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. நேற்று பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகின, இதில் காங்கிரஸ் படு மோசமான தோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து ரெட்டியை இப்போதைக்குப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ் மேலிடம். இதையடுத்து ரோசய்யா உடனடியாக விலகினார்.
அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டது. அவர் சபாநாயகர் கிரண் குமார் ரெட்டியை நேற்றிரவு முதல்வராக தேர்வு செய்தார்.
இதையடுத்து இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் கிரண். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கிரண் குமார் ரெட்டி, மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது தலைமைக் கொறடாவாக இருந்தவர்.
பிலரு தொகுதியிலிருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ ஆனவர். ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவராக இருந்தபோதிலும், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நெருக்கமில்லாதவர் கிரண்குமார். மேலும், ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருங்கவும் விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரண்குமார் ரெட்டியின் நியமனம் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது காங்கிரஸ். ஒன்று ரெட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளதன் மூலம் ஜெகன் மோகன் குரூப்பின் சமுகரீதியிலான பிரசாரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
2வது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரானவரை முதல்வராக்கியிருப்பதன் மூலம் அவரை தட்டி வைக்க முடியும் என்று கணக்கிட்டுள்ளது காங்கிரஸ்.
இருப்பினும் கிரண் குமார் ரெட்டி முன்பு ஏகப்பட்ட சவால்கள் காத்துள்ளன. தெலுங்கானா பிரச்சனை அதில் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர முதல்வராகிவிட்டதால், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும் தரப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications