அறந்தாங்கி நீதிபதி வீட்டில் பணம் நகை கொள்ளை: போலீசார் வலை வீச்சு
அறந்தாங்கி: அறந்தாங்கியில் நீதிபதி வெளியூர் சென்ற சமயத்தில் அவரது வீட்டு பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் வேலுச்சாமி. இவர் புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன் பழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2000 ரொக்கம், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிச் சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.