ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணை 30ம் தேதி ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கில் சொத்து குவித்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரி்க்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
அந்த மொழி பெயர்ப்பில் பிழைகள் அதிகமாக இருப்பதாகவும், எனவே அந்த ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை மட்டும் திருத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் இந்த வழக்கில் சாட்சிகள் மறு விசாரணை தனி நீதிமன்றத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம் இன்னும் கிடைக்காததால் வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.