இன்று மும்பைத் தாக்குதல் தினம்-மும்பையில் ப.சிதம்பரம், டெல்லியில் பிரதமர் அஞ்சலி
இதே நாளில் கடந்த 2008ம் ஆண்டு மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேர் நடத்திய கொலை வெறியாட்டத்தில், 166 பேர் கொல்லப்பட்டனர். 3 நாட்கள் நீடித்த இந்த கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கொல்லப்பட்டு விட்டனர். கசாப் மட்டும் உயிருடன் சிக்கினான். தற்போது அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் ஜிம்கானாவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ்சவான், துணை முதல்வர் அஜீத் பவார், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க தியாகிகளை நினைவு கூர்ந்தனர். அவர்களுடன் ப.சிதம்பரம் பேசி அனைவரிடமும் நலம் விசாரித்தார்.
டெல்லியில்
இதேபோல டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த நினைவு நாளில், மும்பை மக்கள் காட்டிய தீரம், விவேகம், தைரியம், மன உறுதி, தியாகத்தை நாம் போற்றுவோம், சல்யூட் வைப்போம்.
இந்த வீரமும், தைரியமும், விவேகமும்தான் இந்திய மக்களின் குணாதிசயம். இதுபோன்ற மக்கள் இருக்கும் வரை எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது. நமது சமூக கட்டமைப்பை சீர்குலைக்க முடியாது.
நமது எதிரிகளின் எத்தகைய வியூகத்தையும் முறியடிக்கும் திறமை நமது மக்களிடம் உண்டு.
மும்பையில் நாச வேலையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வாங்கித் தருவதில் நாடு உறுதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.