சபரிமலை அன்னதான நிதியில் மோசடி: பிடிபட்டார் ஊழியர்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் வழங்கும் அன்னதான நிதியில் மோசடி செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சபரிமலைக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தினமும் 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
அன்னதான திட்டத்திற்கு பக்தர்களிடம் நன்கொடை பெற திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேவசம்போர்டு அதிகாரிகள் கவுண்டரில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பக்தர்கள் அளிக்கும் நிதியில் ஊழியர் ஸ்ரீராஜ் என்பவர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நன்கொடை சீட்டில் எழுதி விட்டு கார்பன் காப்பியில் உண்மையான தொகையை குறைத்து எழுதி வந்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஸ்ரீராஜை போலீசார் கைது செய்து ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.