வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்..!: ஸ்டாலினுக்கு ஜெ பதிலடி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமண உதவித் திட்டம் எனது தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டதாக திமுக சார்பில் கோவையில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஆட்சிக் காலத்தில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையரது மகள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என நான்கு விதமான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இவற்றில், முதல் மூன்று திட்டங்களின் கீழ் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. நான்காவது திட்டமான கலப்புத்திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் திருமணம் செய்தால் ரூ. 10 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்தத் திருமண உதவித் திட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தைப் பொறுத்தவரையில், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அதில் பல்வேறு முறைகேடுகள் நடத்தப்பட்டதன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்தத் திட்டம் கைவிடப்பட்டதன் காரணமாக பயனாளிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால், திருமண நிதியுதவித் திட்டங்களில் திட்ட இலக்கையே மிஞ்சி அதிமுக சாதனை படைத்தது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உண்மை நிலைமை இவ்வாறிருக்க, எனது ஆட்சிக் காலத்தில் திருமண உதவியே அளிக்கப்படவில்லை என்று மனம் போன போக்கில் மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது விஷமத்தனமானது, கண்டிக்கத்தக்கது.
பெண்கள் முன்னேற்றத்தில் அதிமுக முன்னோடியாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வசதியற்ற நிலையில் திருமண வயதைத் தாண்டியும் திருமணம் செய்ய முடியாமல் ஏழை, எளிய பெண்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலைமையை உணர்ந்து 1982ம் ஆண்டே இலவசத் திருமணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஆட்சிக் காலத்தில் 2002ம் ஆண்டு திருவேற்காட்டில் 1,008 இலவச திருமணங்களையும், 2003ம் ஆண்டு அதே திருவேற்காட்டில் 1,053 திருமணங்களையும் அரசின் சார்பில் நான் நடத்தி வைத்தேன் என்பதையும், ஒவ்வொரு ஜோடிக்கும் 4 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன மாங்கல்யம் மற்றும் 18 வகையான சீதனப் பொருட்கள் அளிக்கப்பட்டன என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பெண் குழந்தைகளின் கல்விக்கும், திருமணத்திற்கும் நிதி உதவி வழங்கும் வகையில், ““பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்'" என்ற ஒரு மகத்தான திட்டம் எனது ஆட்சிக் காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது மட்டுமல்லாமல், 1991-1996ம் ஆண்டைய எனது ஆட்சிக் காலத்தில் சிதம்பரத்தில் ஒரே இடத்தில் 2,500 இலவசத் திருமணங்களும், அதன் பின்னர் திருச்சி மாநகரத்தில் ஒரே பந்தலில் 5,004 இலவசத் திருமணங்களும் அதிமுகவால் நடத்தப்பட்டன.
ஏழைப் பெண்களுக்கு, இலவசத் திருமணம் நடத்துவதிலும், திருமண உதவி வழங்குவதிலும் சாதனை படைத்த இயக்கம் அதிமுக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற இந்தத் தருணத்திலும் கழகத்தின் சார்பில் பல்வேறு இலவச திருமணங்களை நான் நடத்தி வைத்துள்ளேன் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
மு.க. ஸ்டாலின் தன்னுடைய உரையில் வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழியை மேற்கோள் காட்டி பேசி இருக்கிறார். வீட்டைக் கட்டிப்பார்ப்பது, கல்யாணம் பண்ணிப்பார்ப்பது என்பது கஷ்டம் என்பதால் நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக இந்தப் பழமொழியைச் சொல்லி வைத்தார்கள்.
இந்தப் பழமொழி தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், அந்த அளவுக்கு கட்டுமானப் பொருட்களின் விலையும், தங்கத்தின் விலையும் உயர்ந்து, வீட்டை கட்டுவதும், கல்யாணத்தை பண்ணுவதும் மிகக் கடினமானதாகி விட்டது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி, இலவச திருமணங்களை நடத்துவதிலும், திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் அதிமுகவிற்கு நிகர் யாருமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications