நல்லவர்கள் கூட்டணி அமைத்தால் ஆட்சி மாற்றம் உருவாகும்-சரத்குமார்
கோவையில் கொங்கு மண்டல சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசுகையில்,
ஊழலற்ற, ஒளிவு மறைவில்லாத தலைவர்களை உருவாக்கும் கட்சி சமத்துவ மக்கள் கட்சி. ஆட்சியாளர்கள் கொண்டு வரும் நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுவோம்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் நல்ல திட்டம். இதில் அறுவை சிகிச்சையோடு மருந்தையும் இலவசமாக வழங்க வேண்டும். இலவச கலர் டி.வி. திட்டம் தேவையற்றது. சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 கலர் டி.வி. வாங்கும் சக்தியை மக்களுக்கு உருவாக்குவோம். இலவசங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
திருமங்கலம் தேர்தலில் பணத்தால் வென்றார்கள். ஓட்டுக்கு பணம் தரப்படும் போது அண்ணா சொன்னது போல் மக்களின் கைகள், கண்கள் கூச வேண்டும். நெஞ்சத்தில் இருக்கும் நியாய உணர்ச்சிகள் கொதித்து எழ வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பேசுகையில் அவர்கள் செய்யவில்லையா? இவர்கள் செய்யவில்லையா? என்று கருணாநிதி கேட்கிறார். தவறு நடந்ததா? என்பதை விளக்காமல் திசை திருப்ப கூடாது. பிரதமர் மன்மோகன்சிங் எந்தவித நிர்ப்பந்தங்களுக்கும் உட்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஊழல் குறித்த உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டியது அவசியம். நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் என்று துணை முதல்வர் பேசியிருக்கிறார்.
உங்களுக்கு ஆசை இருக்கலாம் எங்களுக்கு ஆசை இருக்க கூடாதா? உங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதும் முதல்வர் பதவிக்கு தலைவர்கள் ஆசைப் படவில்லையா? முறையாக பயிற்சி பெற்று நல்லவர்களின் ஆணைப்படி நடந்தால் முதல்வர் பதவி எங்களுக்கும் கிடைக்கும். சமத்துவ மக்கள் கட்சியில் எந்த தொண்டரும் முதல்வராகலாம்.
விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா, என்று என்னிடம் கேட்கிறார்கள். நல்லவர்கள் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அவரை வெற்றி பெற செய்யுங்கள். அப்படி வெற்றி பெற்றால் முதல்வருக்கோ, துணை முதல்வர் பதவிக்கோ அடி-தடி நடக்காது. நல்லவர்கள் கூட்டணியை மக்கள் வரவேற்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை நல்லவர்கள் கூட்டணி அமைத்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் உருவாகும் என்றார் சரத்குமார்.