தூத்துக்குடி மாநகராட்சியின் மெத்தனத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அண்ணாநகர், பிரையன்ட் நகர், வி.ஈ.ரோடு, பாலவிநாயகர் கோவில்தெரு, சண்முகபுரம், கேவிகே நகர், ஜார்ஜ் ரோடு, டபுள்யூஜிசி ரோடு உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை நீரும், கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றனர்