கடும் அமளிக்கு மத்தியில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்-ஒத்திவைப்பு
டெல்லி: எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் இன்று நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் லோக்சபாவும், முன்னதாக ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். தற்போது தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் விவகாரத்தையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் காரணமாக கடந்த 13 நாட்களாக இரு அவைகளும் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் இன்று 14வது நாளாக அமளி தொடர்ந்தது.
காலை கூடிய லோக்சபாவும், ராஜ்யசபாவும் தொடர் அமளி காரணமாக பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ராஜ்யசபா 12 மணிக்குக் கூடியபோது அமளி தொடரவே இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா 12 மணிக்குக் கூடியபோதும் அமளி தொடர்ந்தது.இருப்பினும் நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஆளும் கட்சி இறங்கியது. அமளியைப் பொருட்படுத்தாமல் நிதி ஒதுக்கீடு மசோதாவை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அது நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
அரசு தங்களைப் பொருட்படுத்தாமல் நிதி ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததால் வெகுண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் மீரா குமார் இருக்கையை சுற்றிலும் நின்று கடுமையாக கோஷமிட்டனர். ஆனால் அதை சபாநாயகரும், ஆளுங்கட்சித் தரப்பும் பொருட்படுத்தவில்லை. மசோதா நிறைவேறியதும் அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
கடந்த 14 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயிருப்பதால் எம்.பிக்களுக்காக அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம் பல கோடி அளவுக்க விரயமாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications