தமிழக இளைஞர் காங் பாதயாத்திரை-ராகுல் காந்தி அதிருப்தி?
டெல்லி: கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் குறையை காங்கிரசார் தீர்க்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் களியக்காவிளையில் இருந்து சென்னை வரை தமிழக இளைஞர் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர். கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கிய பாத யாத்திரை நவம்பர் 24ம் தேதி நிறைவடைந்தது.
இவர்கள் தங்கள் சாதனைகளை எடுத்துச் சொன்னதை விட திமுக மீது தாக்குதல் நடத்தியதே மிக அதிகம். மேலும் காங்கிரசின் வழக்கமான கோஷ்டி பூசலும் ஆங்காங்கே தலைகாட்டி மக்களிடையே அவர்களது நிஜ முகத்தைக் காட்டியது.
இந் நிலையில் இந்த பாதயாத்திரையின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வரவில்லை. காரணம், அந்த பாத யாத்திரையில் ராகுலுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மற்றும் நிர்வாகிகள் டெல்லியில் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர்.
அப்போது பாத யாத்திரையின் தொகுப்பு ராகுலிடம் கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்த அவர் பாத யாத்திரை சென்றதில் மகிழ்ச்சி. ஆனால் எதிர்பார்த்தபடி மக்களிடம் அதற்கு பலனில்லை.
தொடர்ந்து கிராமங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க பாடுபடுங்கள். கிராமங்களில் அதிக அளவில் கூட்டம் நடத்தி மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
பின்னர் ராகுலுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய கட்சியினரிடம் அவர் நீங்கள் முதலில் சேவை செய்து பெரிய நிலைக்கு வாருங்கள், பிறகு நானே வந்து உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம்.
இந் நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளே பாத யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.
அப்போது கிராமப் பகுதிகளில் அதிக அளவி்ல் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளனராம். மேலும் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வினியோகிக்கவும் முடிவு செய்துள்ளனர்.