ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு ஏதாவது தகுதி உண்டா-பிரணாப் கேள்வி
டெல்லி: தெஹல்கா ஊழலில் சிக்கிய பாஜகவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்க கொஞ்சம் கூட தகுதி கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், பாஜக ஆட்சியில் தெஹல்கா விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து விடவில்லை. அந்தக் கட்சியின் தலைவரே பணத்தை வாங்குவதை வீடியோவில் பார்த்தோம். ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுவதாக இருந்தால், அந்த ஊழலைப் பற்றியும் பாஜக பேச வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விசாரணையை பத்திரிகைகளே நடத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் முதல் நாளில் இருந்தே விசாரணையை நாங்கள் தொடங்கி விட்டோம். காமன்வெல்த் விளையாட்டு முடிந்த உடனேயே விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது.
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை கிடைத்த உடனேயே, சம்பந்தப்பட்ட அமைச்சர் ராசாவும் ராஜினாமா செய்துவி்ட்டார். அவர் ஊழல் செய்தாரா, இல்லையா என்பது உறுதியாகாமலேயே இது நடந்துவிட்டது. அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும் என்றார்.












Click it and Unblock the Notifications