அதிமுக பிமுகர் மகள் மர்ம மரணம்-மறு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூர்: அதிமுக பிமுகர் மகள் மர்ம மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது பூச்சிக்காடு. இப்பகுதியைச் சேர்ந்தவர் வடமலைபாண்டியன். இவர் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளராக உள்ளார்.
இவர் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 4.9.2010 அன்று நான் சென்னையிலிருந்து காரில் எனது மனைவி மற்றும் மகள் சூரியதேவியுடன் ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். எனது காரை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
கார், எப்போதும்வென்றான் அருகே வரும் போது திடீரென விபத்துக்குள்ளானதில் மகள் சூரியதேவி இறந்தார். நானும், மனைவியும் காயத்துடன் உயிர் தப்பினோம்.
எனது காரின் பின்னால் சந்தேகப்படும்படியாக 2 லாரிகள் பின் தொடர்ந்து வந்தது பின்பு வாசரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து எப்போதும்வென்றான் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்பதால், இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில், விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி எஸ்.பி., எப்போதும் வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் இது குறி்த்து பதில் மனு தாக்கல் செய்யவும், மறு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.