ஜேபிசி விசாரணைக்கு காங். முடிவு?-கூட்டணிக் கட்சிகளுடன் இன்று அவசர ஆலோசனை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் சம்மதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வீட்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கடந்த 17 நாட்களாக ஸ்தம்பித்துப் போயுள்ள நாடாளுமன்றத்தை உயிர்ப்பித்து கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை கண்டிப்பாக தேவை. இதைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம் எஎன்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக கூறி விட்டன.
ஜேபிசி விசாரணைக்கு மமதா பானர்ஜி, சரத் பவார் போன்றோர் ஆதரவாக உள்ளனர். அதேசமயம், திமுக இதை இதுவரை ஏற்கவில்லை. அதேசமயம், காங்கிரஸ் கூட்டணியில் பெரும்பாலானோர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினால் திமுகவும் சம்மதிக்கும் என்ற நிலையே உள்ளது.
மேற்கு வங்கத்தி்ல சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், தான் நல்ல பிள்ளை என்பதாக காட்டிக் கொள்வதற்காக ஜேபிசி விசாரணைக்கு மமதா பானர்ஜியும் சம்மதிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய நிலையில் மமதா பானர்ஜி, முதல்வர் கருணாநிதி, சரத் பவார் ஆகியோர் சம்மதித்தால் ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸும் சம்மதிக்கும் என்று தெரிகிறது. இந்த மூன்று கட்சிகளின் சம்மதத்தையும் பெறவே இன்றைய கூட்டம் என்றும் கருதப்படுகிறது.