தொற்று நோயைத் தடுக்க வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுகாதாரக் குழு!
சென்னை: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுசுகாதாரத் துறை மருத்துவக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்கள், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் வீடுகளை இழந்த ஏராளமானோர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரிடமிருந்து வயிற்றுப் போக்கு, அம்மை உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க பொது சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த இரண்டு கூடுதல் இயக்குநர்கள் மற்றும் ஏழு இணை இயக்குநர்கள் வெள்ளம் பாதித்த மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த மேற்பார்வைக் குழுவினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு என பிரிக்கப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் ஆகியோருடன் சென்று மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
மேலும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரிடம் நன்றாகக் காய்ச்சி ஆற வைத்த குடிநீரைக் குடிக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவக் குழுவினர் வலியுறுத்த உள்ளனர். குடிநீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், குடிநீரில் 0.1 பிபிஎம் என்ற உரிய அளவில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக சென்னை கோபாலபுரம் உள்பட நான்கு இடங்களில் உள்ள நிரந்தர நிவாரண மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து உணவு மூலம் டைஃபாய்டு உள்ளிட்டவை பரவுவதைத் தடுக்க தயாரிக்கப்படும் உணவின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications