ராஜசேகர ரெட்டியால் வென்றவர்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? - ரோஜா
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட தயாரா? என்று நடிகை ரோஜா சவால் விடுத்துள்ளார்.ஹைதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் நம்பிக்கை நட்சத்திரம். ராஜசேகர ரெட்டி சுய மரியாதை மிகுந்தவர். இதே போல் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும், சுயமரியாதைமிக்கவர். யாருக்குப் பணிந்து செல்லாதவர். காங்கிரஸ் மேலிடம் கீழ்மட்ட தலைவர்களை அடிமைபோல் நடத்துகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவிய ஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. சட்டம்-ஒழுங்கை சீர் குலைத்து ஆந்திராவை சீரழித்ததுதான் காங்கிரசின் சாதனை.
கடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தயாரா?
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பெயரைச் சொல்லி ஆந்திர மக்களிடம் ஓட்டு கேட்க தைரியம் உள்ளதா? தற்போது மாநில, மாவட்ட, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு விலகி ஜெகன் பக்கம் வந்து விட்டார்கள்.
தேர்தலின் போது காங்கிரசுக்கு வாக்குசாவடி ஏஜெண்ட் நியமிக்க கூட இப்போது ஆளில்லை என்பதுதான் உண்மை. அடுத்த தேர்தலில் பீகாரில் ஏற்பட்ட நிலைதான் ஆந்திராவிலும் ஏற்படப் போகிறது..", என்றார்.