ஊழல்களின் கங்கோத்ரி சோனியா-தாக்கரேவை சந்தித்த பின் சு.சாமி பேச்சு
மும்பை: ஊழல்களின் உறைவிடமே சோனியா காந்திதான். ஊழல்களின் கங்கோத்ரியா அவர் விளங்குகிறார் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி இன்று சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேவை பந்த்ராவில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஊழலின் உறைவிடமே சோனியா காந்தி தான். அவர் தான் நாட்டில் நடக்கும் ஊழல்களின் கங்கோத்ரி. இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றுமாறு நான் பாலாசாகிபைக் (தாக்கரே) கேட்டுக் கொண்டேன்.
விரைவில் ஊழலை எதிர்த்து பேரணி நடத்தவிருக்கிறோம். அதற்காக மற்ற கட்சிகளை ஒன்று திரட்டும் பணிகளைத் துவங்குவோம். இந்த முயற்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் ஊழலுக்கு எதிரான அணியில் சேர்ப்போம் என்றார்.
சாமியை கைது செய்யக் கோரி போஸ்டர்:
இந் நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வலியுறுத்தி சங்கரன்கோவிலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் நகர வீதிகளில் காங்கிரஸ் பிரமுகர் ஆனந்தராஜ் என்பவர் நேற்று சுப்ரமணிய சாமியை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
மத்திய அரசே, மாநில அரசே கைது செய், ராஜீவ் காந்தியின் படுகொலையில் நேரடி தொடர்பு உள்ள சுப்பிரமணிய சாமி தன்னுடைய சதூர்யத்தால் அப்பாவி போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழி போட்டு விட்டு தற்காலிகமாக தப்பித்து கொண்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவி சோனியா காந்தியை தொடர்ந்து விமர்சித்து வரும் சுப்பிரமணியா சாமியை உடனே கைது செய்.
சுப்பிரமணியா சாமியின் அர்த்தமற்ற விமர்சனங்களை தொடர்ந்து பரப்பி வரும் தனியார் தொலைகாட்சியே (எதிர்கட்சிக்கு சொந்தமானது) இதை திருத்திக் கொள். அல்லது திருத்தப்படுவீர், இவண், டி.ஆனந்தராஜ், இளைஞர் காங்கிரஸ், கருப்பாகுளம் ஊராட்சி, சங்கரன்கோவில் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.
இவ்வாறு அந்த சுவரெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications