ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜய்?
அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே வெளிப்படையாக கூறி விட்டார் விஜய். இருப்பினும் அதற்கு முன்னர் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்கு செய்வதிலும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைப்பது தொடர்பான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியடும் வகையில் தனது அரசியல் பிரவேச நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருமே அதிமுக கூட்டணியில் நாம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதை விஜய்யும்ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் ஜெயலிலதாவை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில் இன்று மாலை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை விஜய் சந்திப்பார் என்றும், அரசியல் திட்டங்கள் தொடர்பாக அவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செல்வார் என்று ஒரு தகவலும், போக மாட்டார் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. சந்திரசேகர் ஒரு தீவிர திமுக அனுதாபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.