தமிழர்களை உடனடியாக காப்பாற்றுங்கள்-மன்மோகனுக்கு பிரான்ஸ் தமிழ் அமைப்பு கோரிக்கை
பாரீஸ்: இலங்கையில் சிக்கித் தவிக்கும், சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை உடனடியாகக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அமைப்பின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
இன்று 62 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உங்களை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடையும் அதேவேளை இலங்கைத் தீவில் குறிப்பாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அவலங்களை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் விஷயத்தில் 1987 ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசினால் பாதிக்கப்படுகின்றனர்.
அரசியல், பொருளாதார, கலை, கலாசார இன்னல்கள் கஷ்டங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும். இக்கடமையிலிருந்து இந்தியா தவறுவது இம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தொடர்ந்து கொடுத்து வருகிறது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சரித்திரத்தையோ அல்லது அவர்களுக்கு நேர்ந்துள்ள அவல நிலையையோ நாம் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் இலங்கை அரசினதும் அவர்களது ஊது குழல்களான சிங்கள தீவிரவாத கட்சிகளினதும் தமிழ் மக்கள் மீதான தவறான மோசமான பிரசாரங்களை இந்தியா நம்பி, இவர்களது சூழ்ச்சிக்கு துணை போகாது, தமிழ் மக்களை உடனடியாக காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும்.
இன்று இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள்-புத்த விகாரைகள்-சிங்கள மயப்படுத்தல் போன்றவை மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. வடக்கு- கிழக்கிலுள்ள மக்களில் கூடுதலானோர் அகதிகளாக முகாம்களிலும் கைதிகளாக தடுப்புக் காவலிலும் உள்ளனர்.
இவர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு பூகோள அமைப்பை இரவோடு இரவாக சிறிலங்கா அரசும் அதன் ராணுவமும் மாற்றி வருகின்றன.
இம் மக்களையும் இவர்களது நிலங்களையும் உடனடியாக காப்பாற்றுவதற்கு இந்திய மக்களும் இந்திய அரசும் உடனடியாக 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஓர் தற்காலிக தீர்வை உங்களால் காண முடியும்.
1987 ஆம் ஆண்டு இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை உண்மையில் ஓர் நிரந்தர தீர்வாக இருக்காவிடினும் இந்த உடன்படிக்கையை நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவினால் தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு உடன் பரிகாரம் நிச்சயம் காண முடியுமென கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications