கசாப்பின் அடுத்த நாடகம்-தனது மனோநிலையை ஆராய கோரி மனு-நாளை விசாரணை
மும்பை: மரண தண்டனையில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளான் கசாப். தற்போது தனது மனோ நிலைமையை பற்றியும், தனது வயது குறித்தும் ஆராயுமாறு மருத்துவக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி பம்பாய் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளான்.
இதுதொடர்பாக கசாபின் வழக்கறிஞர்கள் அமின் சொல்கர் மற்றும் பர்ஹானா ஷா ஆகியோர் தனித்தனியே இரண்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ஒன்றில் அவனின் வயதைக் கண்டுபிடிக்கவும், மற்றொன்றில் அவனின் மனோநிலையைப் பற்றி கண்டறியுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் வி எம் மோர் ஆகியோர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
வயதைக் கண்டுபிடிக்குமாறு கசாப் கேட்டுக் கொண்டுள்ளது இது இரண்டாவது முறை ஆகும். கசாப் இதற்கு முன் நீதிமன்றத்தில் தான் ஒரு மைனர் என்றும், தன்னை 'ஆசிபிகேஷன்' சோதனைக்கு உட்படுத்தினர் என்றும் வாதாடினான். அந்த சோதனையில் அவன் 20 வயதுக்கு மேற்பட்டவன் என்றும், மேஜர் என்றும் கண்டறியப்பட்டது.
இந்த மனுக்களி்ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு என்ஜிஓ-வை நியமித்து, அவர்களை கசாப் பற்றியும், அவனின் குடும்பப் பின்னணி, அவன் எந்த சூழ்நிலையில் 26/11 தாக்குதலில் ஈடுபட்டான் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி ஒரு மைனருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தன்னை ஒரு சிறுவனாக காட்ட கடுமையாக முயற்சித்து வருகிறான் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications