திருமணமான அன்றே மணப்பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி: சோகமாய் மாறிய திருமண வீடு
திருப்பத்தூர்: திருமணம் நடந்த அன்று மாலையே மணப்பெண்ணை மாடு விரட்டி கால் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள ஓமகுப்பம் சர்க்கரை குப்பத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் மகள் நதியா (21). இவருக்கும் ஆம்பூர் அருகே உள்ள தேவனாபுரத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கும் பெரியோர்கள் நிச்சயித்தபடி நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமணச் சடங்குகள் மாப்பிள்ளை வீட்டில் வைத்து நடந்தன.
அன்று மாலை புதுமணத் தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்தனர். முறையாக அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடு கட்டவிழ்த்துக் கொண்டு போவதை பார்த்த நதியா அதை கட்டிப்போட சென்றார். ஆனால் மாடு மிரண்டு அவரைத் விரட்ட ஆரம்பித்தது. பயத்தில் அவர் வீட்டுக்குள் ஓட முயன்றார்.
அப்போது வீட்டின் அருகே உள்ள 35 அடி ஆழக் கிணற்றில் கால் தவறி விழுந்தார். சத்தம் கேட்ட மாப்பிள்ளை உள்ளிட்டவர்கள் நதியாவை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காலையில் திருமண வீடாக மகிழ்ச்சியாக இருந்தது மாலையில் இளவு வீடாக மாறியது.












Click it and Unblock the Notifications