டிச.23ல் குமரி செல்லும் ஜெயலலிதா: அய்யா வைகுண்டர் பதியில் தரிசனம்
நாகர்கோவில்: குமரி மாவட்டம் அருமனையில் வரும் 23-ம் தேதி அருமனை வட்டார ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
விழா முடிந்ததும் அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு சென்று தரிசனம் செய்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக வரும் 23-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அருமனைக்கு வருகிறார்.
பிற்பகல் 2.30 மணிக்கு அங்கு நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார். பின்னர் அருமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சாமிதோப்பு வருகிறார். அங்கு தரிசனம் முடித்து விட்டு சென்னை செல்கிறார்.
ஜெயலலிதா வருகையை முன்னிட்டு அருமனை விழா மைதானம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மைதானத்தை ஏற்கனவே அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட பலர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாமிதோப்பு சென்ற பன்னீர்செல்வம், செங்கோட்டையான் ஆகியோர் அங்கு ஜெயலலிதா வந்து செல்லும் இடங்களை பார்வையிட்டனர்.
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை:
இந் நிலையில் சில அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஜெயலலிதா சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர் உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவரை சந்தித்தனர்.
அப்போது சட்டசபை தேர்தல் பணிகள், கட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஜெயலலிதா விவாதித்ததாகத் தெரிகிறது.
சில தினங்களுக்கு முன் 10 மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஜெயலலிதா பேசியது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் மேலும் 10 மாவட்டச் செயலாளர்களை ஜெயலலிதா சந்திப்பார் என்று தெரிகிறது.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்கள் வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சந்திப்புகளை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்.
ஜெவை சந்தித்த சேகர்பாபு:
இந் நிலையில் வடசென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. சேகர்பாபுவும் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் முன் கூடிய சேகர்பாபுவின் ஆதரவாளர்கள், சேகர்பாவுக்கு ஆதரவாகவும், மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சேகர்பாபுவை அழைத்துப் பேசியுள்ளார் ஜெயலலிதா.