சாதகமான சூழல் நிலவுகிறது-வானிலை அறிக்கை 'ரமணன்' ஸ்டைலில் ஓ.பி. கணிப்பு!
நெல்லை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, தொண்டர்கள் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என நெல்லை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
நெல்லை மாநகர், புறநகர் அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா வரவேற்புரை ஆற்றினார்.
அப்போது அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது,
அதிமுக தொண்டர்களின் முகத்தை பார்க்கும்போது ஒரு வித மகிழ்ச்சி தெரிகிறது. ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலரப் போவதை தொண்டர்களின் முகம் காட்டுகிறது.
குமரியில் வரும் 23-ம் தேதி ஜெயலலிதா கலந்து கொள்ளும் அருமனை கிறிஸ்துமஸ் விழா புதிய சரித்திரத்தை உருவாக்கும். தமிழகத்தில் கருணாநிதியின் குடும்ப ஆட்சி, சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது. ஸ்பெக்ரம் ஊழலால் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
யார் ஆட்சிக்கு வந்தால் அமைதியான நிலையை தர முடியும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மின்வெட்டு இல்லாமை, விலைவாசி உயர்வு கட்டுபாடு, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு போன்ற நிலைகள் வரவேண்டுமாயின் அது ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். மக்களின் உணர்வுகளை மதித்து தான் திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் அதிமுக ஆர்பாட்டங்களை நடத்தியது.
குமரி மாவட்டதிற்கு வரும் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து நிகழ்ச்சி வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications