2015-க்குள் இந்தியா - சீனா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தகம்
டெல்லி: வரும் 2015-ம் ஆண்டுக்குள் இந்தியா - சீனா இடையே 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என இரு நாட்டுப் பிரதமர்களும் அறிவித்துள்ளனர்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியோபோவும் டெல்லியில் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினர். அப்போது பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும், சீனாவும் கையெழுத்திட்டன.
பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் தவிர, பொதுவான ஆறுகள் குறித்த தகவல் பரிமாற்றம், ஊடகப் பரிமாற்றம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றில் தலா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையம் இடையே ஒரு ஒப்பந்தமும், இந்திய எக்ஸிம் வங்கி (ஏற்றுமதி- இறக்குமதி வங்கி) மற்றும் சீன மேம்பாட்டு வங்கி இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.
பின்னர் இரு தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில், இந்தியா - சீனா இடையே வர்த்தகத்தில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கும் வகையில், 100 பில்லியன் டாலர் அளவுக்கு கூட்டு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 5 ஆண்டுகளில் இந்தியா அதிக அளவு பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும். மேலும் இருநாட்டு பிரதமர்களும் தடையின்றி பேசிக் கொள்ள வசதியாக ஹாட்லைன் வசதியும் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு தொழிலதிபர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேசி முடிவுகள் மேற்கொள்ள இந்தோ - சீன தொழிலதிபர்கள் பேரவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.