பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, ப.சிதம்பரத்தை தாக்க புலிகள் திட்டம்-ஐபி எச்சரிக்கை

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதியில், விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது, அந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்போது இந்தியாவில், குறிப்பாக கேரளாவில் ஒன்று கூடி வருகின்றனர் என்று இந்திய உளவுத்துறையான ஐபி மற்றும் ரா ஆகியவை சமீப காலமாக கூறி வருகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை என்று கேரள காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, ப.சிதம்பரம் ஆகியோரைப் படுகொலை செய்ய புலிகள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை ஐபி தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை வந்திருப்பது உண்மைதான் என்று தமிழக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதல்வர் கருணாநிதிக்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ப.சிதம்பரத்தின் சென்னை மற்றும் சிவகங்கை வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வரவுள்ளார். அடையாறு சுற்றுச் சூழல் பூங்காவை அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு எச்சரிக்கையை ஐபி வெளியிட்டுள்ளதால், பிரதமருக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டிஜிபி லத்திகா சரண் கூறுகையில்,
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கடுமையான முயற்சிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் டிரிப்யூனல் ஒன்று இதுதொடர்பான வழக்கை விசாரித்து, புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு சரியே என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பின்னணியில் தற்போதைய புலிகள் தாக்குதல் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications