அதிமுகவுடன் கூட்டணி சேர ராகுல் காந்தி விருப்பம்: ராதாரவி
மதுரை: நான் சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்தபோது அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி சேர விருப்பம் இருப்பது தெரிய வந்தது என்று நடிகர் ராதா ரவி கூறினார்.
ஜெயலலிதா பேரவை சார்பில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய ராதா ரவி,
நட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடும் ஒரே இயக்கம் அதிமுக நான் கடந்த 1999ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தேன். அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நாடு போற்றும் தலைவர். அவரது திறமை, செயல்பாடுகளுக்கு நிகராக வேறு ஒரு தலைவர் இல்லை.
நான் சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்தேன். உடனே நான் காங்கிரசில் சேர போவதாக வதந்தி கிளப்பிவிட்டார்கள். உடனே புரட்சித் தலைவி அம்மா அவர்களை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து விட்டேன்.
நான் ராகுல் காந்தியை சந்தித்தபோது தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்று கேட்டார். அவரிடம் அதிமுகதான் வெற்றி பெறும் என்று கூறினேன்.
அதற்கான காரணங்களையும் அவர் என்னிடம் கேட்டார். அப்போது ராகுல் காந்திக்கு அதிமுகவுடன் கூட்டணி சேர விருப்பம் இருப்பது தெரிய வந்தது.
நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகரன் அம்மா அவர்களை சந்தித்துள்ளார். விரைவில் தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட டைரக்டர்கள், திரையரங்க அதிபர்கள் ஜெயலலிதாவை சந்திக்க இருக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தமிழனுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதை மறைக்க முதல்வர் கருணாநதி ஊழலுக்கு ஜாதிச் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பெக்ட்ரம் குறித்துதான் பேசுகிறார்கள். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக தான் அமோக வெற்றி பெறும். புரட்சித் தலைவி மீண்டும் முதல்வராவார் என்றார்.