டெல்லியில் சீன பிரதமருக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம்: 1,000 பேர் பேரணி
டெல்லி: டெல்லியில் 1,000 திபெத்தியர்கள் கூடி நேற்று சீனப் பிரதமர் வென் ஜியாபாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள உறவு பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வென்னின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் போராட்டத்தில் குதித்தனர். வென் ஜியாபோ தங்கியிருக்கும் தாஜ் பேலஸ் ஹோட்டல் முன் 7 திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சீனாவுக்கும், சீன பிரதமருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சானக்யபுரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் நேற்று மாலை வரை விடுதலை செய்யப்படவில்லை.
இதற்கிடையே 1,000 திபெத்தியர்கள் ராஜ்காட்டில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தினர். பின்னர் ஜந்தர் மந்தரில் போராட்டக் கூட்டம் நடத்தினர். அவர்கள் திபெத்துக்கு விடுதலை அளிக்குமாறு சுவரொட்டிகள் வைத்திருந்தனர்.
திபெத்தியர்களின் இந்த போராட்டத்தால் சீனப் பிரதமர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும், சீன தூதரகத்திறக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications