விபச்சாரப் பெண்ணை மாட்டிவிட சாப்ட்வேர் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். ஒரு விபச்சாரப் பெண்ணை சிக்கலில் மாட்டி விடுவதற்காக இந்த வேலையை அந்த நபர் செய்துள்ளார்.
சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் மர்ம தொலைபேசி வந்தது. இதையடுத்து அடையாறு போலீஸாரும் செம்மஞ்சேரி போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தினர். ஆனால், அது அது புரளி என்று தெரியவந்தது.
புரளியை கிளப்பிய நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
செல்போனிலிருந்து அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், அந்த செல்போனுக்கு சொந்தக்காரரான தேனி மாவட்டம் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் (44) உடனடியாக சிக்கிவிட்டார்.
மனைவியைப் பிரிந்த இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த நிஷா என்ற விபசாரப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து பெண்களை வைத்து விபசாரத் தொழிலை நடத்தி வந்துள்ளனர்.
ஆனால், சமீபகாலமாக நிஷா இவரை ஒதுங்கி தனியாக தொழில் நடத்த ஆரம்பித்துவிட்டராம். சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனம் அருகே நிஷா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு விபசாரத் தொழில் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து அந்த சாப்ட்வேர் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அதில் நிஷாவை சிக்கவைக்க முடிவு செய்தாராம். அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் அலுவலகம் அருகே வசிக்கும் நிஷாவும் அவரது நண்பரும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளனர் என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்து.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் நிஷாவையும் (29) விபசார வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.