ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவை கைது செய்ய வேண்டும்-ஜெ.
சென்னை: 2ஜி ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வற்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் உடனடியாக ராசா கைது செய்யப்பட வேண்டும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே வருமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து எந்த முன்னேற்றம் தென்பட்டாலும் அதுகுறித்து நானே உரிய முறையில் அறிவிப்பேன் என்றார் ஜெயலலிதா.
ஸ்பெக்ட்ரம்-புதுச்சேரியில் 22ம் தேதி ஆர்ப்பாட்டம்
முன்னதாக ஜெயலலிதா வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறுது, யாரெல்லாம் அதன் பின் உள்ளனர் என்பது ஜேபிசி விசாரணை மூலம் மட்டும் தான் வெளிச்சத்திற்கு வரும்.
எதிர்கட்சிகள் ஒன்றாகத் திரண்டு ஜேபிசி விசாரணை தான் வேண்டும் என்று போராடியும் பலனில்லாமல் போனது.
ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜேபிசி விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்திராத, கேள்விப்பட்டிராத வகையில் குளிர் கால கூட்டத்தொடரில் 23 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியது.
இதற்கு காரணமாக இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், ஜேபிசி விசாரணை நடத்த வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வரும் 22-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடக்கிறது. காலை 9.30 மணி அளிவில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணா சிலை அருகே இருந்து புறப்படும் ஊர்வலம் தலைமை தபால் நிலையத்தை வந்தடையும்.
இது தவிர 2ஜி ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முகவரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று அம்மாநில துணை நிலை ஆளுநரிடம் கொடுக்கப்படும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் மைத்ரேயன் எம்.பி. தலைமை வகிப்பார். புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநிலக் கழக அவைத் தலைவர் பாண்டுரங்கன், புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர் ஓமலிங்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.