வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: வெங்காய விலையைப் பற்றி பெரியாரிடம்தான் கேட்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி சிரித்துக் கொண்டே கூறினார்.
திமுக தலைவரான கருணாநிதி மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென் சென்னை, புதுக்கோட்டை, தர்மபுரி தெற்கு, திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்துள்ளது.
இன்று நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
அதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாணசுந்தரம்,
நெல்லை மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதீன் கான், பூங்கோதை, எம்.எல்.ஏக்கள் அப்பாவு, மாலைராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதில் நெல்லை மாவட்ட அரசியல் நிலவரம், அரசு திட்டங்கள் அமலாக்கம், சட்டசபை தேர்தல் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இக் கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த முதல்வரிடம் வெங்காய விலை உயர்வு பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர், 'அதை பெரியாரிடம்தான் கேட்க வேண்டும்' என்று வேடிக்கையாக பதிலளித்தார்.