இளைஞர் காங். நிர்வாகி தமிழக முதல்வராக வாய்ப்பு: ராகுல் காந்தி

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. கட்சியில் இளைஞர்களை சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அவர்களை வரவேற்று, மதிப்பளித்து, உரிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்தல்களிலும் இளைஞர் காங்கிரசாருக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும்.
பஞ்சாயத்து அளவில் அதிக அளவில் இளைஞர் காங்கிரசார் வெற்றி பெற்றால்தான் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும். அடுத்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலமுள்ளதாக ஆக்க முடியும்.
நான் அரசியலுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் பிரச்சனையில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். இதே போல நீங்களும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தினால் கட்சியை வலுப்படுத்த முடியும்.
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது.
விலைவாசி உயர்வைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை பிரதமர் பார்த்துக் கொள்வார். மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும் என்றார்.
முன்னதாக ராகுல் காந்தியை சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் வானகரம் சென்றார்.
இக் கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். மைதானத்திற்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் தாஜ் கன்னிமரா ஹோட்டலுக்கு வந்து 'அறிவுஜீவிகளை' (intellectuals) சந்தித்தார்.
பின்னர் மீண்டும் ஐ.என்.எஸ். மைதானத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் சென்றார்.
ராகுல் காந்தி வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் கூட்டங்கள் நடக்கும் இடங்கள் அனைத்தும் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்புப்படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
செருப்புக்கு அனுமதி இல்லை:
வானகரத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸார் பலத்த சோதனைகளுக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டனர். செருப்பு அணிந்து உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை.
ராகுலுக்கு கருப்புக் கொடி-இந்து மக்கள் கட்சி:
இந் நிலையில் மதுரை வரும் ராகுல் காந்தியை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இலங்கையில் தமிழர் படுகொலைக்கு துணை போனது காங்கிரஸ் அரசு. அதே போல தமிழக மீனவர்களை காப்பாற்ற தவறியதும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தான். மேலும் இந்து அமைப்புகள் பயங்கவாதிகள் போல தீவிரவாதிகள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியிருப்பது வன்மையாக கண்டனத்திற்கு உரியது.
எனவே, தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு எங்களது கண்டன்தை தெரிவிக்கும் வகையில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி மதுரை வரும் போது கறுப்புக் கொடி காட்டப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications