தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று அறிவிப்போம்... ராகுல்!
அப்போது ராகுலிடம் தியாகராஜன், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் எக்காரணத்தை கொண்டும் கூட்டணி வைக்கக் கூடாது. திமுகவுடனான கூட்டணியே தொடர வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு திமுக எம்பிக்களின் ஆதரவு தான் மிக முக்கியமாக உள்ளது என்றார்.
இதைக் கேட்ட ராகுல் சிரித்துக் கொண்டே, உங்களது கருத்தை கட்சித் தலைமையிடம் தெரிவிப்பேன் என்றார்.
அப்போது இடைமறித்த மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, கூட்டணி குறித்து இங்கு பேசக்கூடாது. அதெல்லாம் டெல்லியில் தான் பேச வேண்டும் என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த தியாகராஜன், ராகுலிடம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
'தமிழக அரசியல் நிலைமை பிடிக்கவில்லை':
இந் நிலையில் நேற்று சென்னையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில், ராகுல் காந்தி ஒரு கேள்வியை எழுப்பினார்.
கூட்டத்தினரை பார்த்து ''தமிழக அரசியல் சூழ்நிலை உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை?'' என்று கேட்டார்.
அங்கிருந்த பெரும்பாலானவர்கள் கைகளை உயர்த்தி பிடிக்கவில்லை என்றனர்.
திமுக உறவில் விரிசல் இல்லை என்கிறது காங்கிரஸ்:
இதற்கிடையே தமிழகத்தில் திமுகவுடனான உறவில் எந்த விரிசலும் இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம், தமிழகத்தில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள சுற்றுப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிங்வி, ராகுல் காந்தி காங்கிரஸ் வளர்ச்சி குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்களிலும் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் தான் இந்த தமிழக பயணமும் அடக்கம். காங்கிரஸ் வளர்ச்சிப் பணிக்காக செல்வதால் தான் அங்கு அவர் மாநில கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திப்பதில்லை. இதனால் தமிழகத்தில் திமுகவுடனான உறவுவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறக் கூடாது என்றார்.
இது தங்கபாலு டெக்னிக்:
முன்னதாக சென்னை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, இளைஞர் காங்கிரசார் கடுமையாக உழைத்தால் உங்களில் ஒருவர் தமிழக முதல்வராக வருவார் என்றார்.
ஆனால் இதை தங்கபாலு மொழி பெயர்த்து கூறியபோது, முதல்வர் என்ற வார்த்தையை வேண்டுமென்றே தவிர்த்தார். அதற்கு கூட்டத்தில் இருந்த பலரும் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் இளைஞர் காங்கிரசார் கடுமையாக உழைத்தால் உங்களில் ஒருவர் முதல்வராக வரமுடியும் என்று ராகுல் காந்தி கூறுகிறார் என்றார். இதன் பின்னரும் தங்கபாலுவுக்கு எதிராக கூச்சல் தொடர்ந்தது.
தனித்து போட்டியிடலாம்-ராகுல்:
பின்னர் நேற்றிரவு மதுரையில் இளைஞர் காங்கிரசாரிடையே பேசிய ராகுல், நமது நட்பை வைத்துதான் திமுகவும் அதிமுகவும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் தனித்து நிற்கும். அது உங்களின் கையில்தான் இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றியை தேடித் தந்தால் அந்த வெற்றியை வைத்து நாங்கள் டெல்லியில் பேசி முடிவெடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று அறிவிப்போம். அதனால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடித் தாருங்கள்.
மற்றபடி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் ஒரு போதும் குறுக்கு வழியில் செலலாது. குறுக்கு வழியில் சென்று ஆட்சியை பிடிக்க ஒருபோதும் காங்கிரஸ் விரும்பியதில்லை என்றார்.